×

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள மாமரத்தில் 4 வகை சுவைகளை தரும் பழங்கள்

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள தல விருட்சமான 4 வகையான சுவைகளை தரும் 3 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான மாமரம் காய்க்க தொடங்கி உள்ளது. பஞ்சபூத தலங்களில் மண் தலமாக போற்றப்படுவது உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில். இங்கு, மூலவர் ஏகாம்பரநாதர் மணல் லிங்கமாக காட்சியளிக்கிறார். இக்கோயிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்து ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் வழிபட்டு செல்கின்றனர். இந்த கோயிலில் தலவிருட்சமாக மாமரம் உள்ளது. சுமார் 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மாமரம் கோயில் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் உள்ளது.

இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமாஸ்கந்தர் வடிவில் காட்சி அளிக்கிறார். அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இந்த மரத்தின் கீழ் தான் காட்சி தந்து மணம் முடித்தார் என சொல்லப்படுகிறது. இதனாலேயே இன்றும் இங்கு திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இங்கு திருமணம் நடைபெற்றால் வாழ்க்கையில் செல்வ செழிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் வாழலாம் என பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த மாமரத்தின் நான்கு கிளைகள் ரிக், யஜுர், சாம, அதர்வண என நான்கு வேதங்களை குறிக்கும் தெய்வீக மாமரம் என நம்பப்படுகிறது.

இதில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளை தருகிறது. குழந்தை பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை உட்கொண்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்நிலையில், தற்போது பூ பூத்து, மாமரம் காய்க்க தொடங்கி உள்ளது.

The post காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள மாமரத்தில் 4 வகை சுவைகளை தரும் பழங்கள் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Ekambaranatha Temple ,Chennai ,Kanchipuram Ekambaranathar Temple ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...